2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார்.
அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார்.
சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா?
எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என.
தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும்.
BBC
