லண்டன்: இஸ்ரேல்-காசா போர், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் கடந்து, மிகப்பெரிய வெறுப்பு பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பிரிட்டனில், இந்த போர் தொடங்கிய பின்னர் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் 300 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. உயிரிழப்புகள் ஒருபுறம் கவலையை ஏற்படுத்தினாலும், அதை தாண்டி மோசமான விஷயங்களை போர் விதைத்திருக்கிறது. பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு இதனை கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, போர் தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில், கடந்த 2011ம் ஆண்டு முதல் வெறுப்பு குற்றங்களை டெல்மாமா(TELLMAMA) எனும் அமைப்பு பதிவு செய்து வருகிறது. அதாவது, கருப்பின மக்கள் மீதான வெறுப்பு, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, ஏழைகள், பெண்கள் மீதான வெறுப்பினால் ஏற்படும் குற்றங்களை இந்த அமைப்பு பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பின் இயக்குநர் இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரிட்டனில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியிலிருந்துதான் இந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுள்ளார். இந்த 4 மாத காலத்தில் பிரிட்டனில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சுமார் 2000 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இவை முந்தைய ஆண்டை விட 335% அதிகம் என்றும் கூறியுள்ளார். 2000 குற்ற சம்பவங்களில், இஸ்லாமியர்களுக்கு எதிராக 77 மிரட்டல்கள், 83 தாக்குதல்கள், 79 நாசவேலைச் செயல்கள், 69 பாகுபாடுகள், 39 வெறுப்புப் பேச்சுகள், மற்றும் 19 முஸ்லிம் எதிர்ப்பு இலக்கியத்தின் எடுத்துக்காட்டுகள் உட்பட 535 முறைகேடான சம்பவங்களை ‘மாமா’ ஆவணப்படுத்தியுள்ளது. இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவெனில், இதில் பாதிக்கப்பட்டவர்களில் 65% பேர் பெண்கள் என்பதுதான்.
இந்த வெறுப்பு குற்றங்கள் சிலவற்றை மாமா விளக்கியுள்ளது. அதாவது, கிழக்கு லண்டனில் பேருந்து ஒன்றில் அத்தனை பயணிகளுக்கு முன்னிலையில், இஸ்லாமிய பயணி மீது மிகவும் வெறுக்கத்தக்க கருத்துக்களை சக பயணி ஒருவர் ஆக்ரோஷமாக கூறியிருந்தார். அதேபோல இஸ்லாமிய குடும்பத்தினர் வசிக்கும் வீட்டின் முன் சிலர், ‘ஹமாஸ்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
இப்படியாக இஸ்லாமியர்கள் மீறு வெறுப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இந்த வெறுப்பு குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அரசு இது தொடர்பாக வெளிப்படையாக பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், முற்போக்கு இயக்கங்களும் கோரிக்கை வைத்திருக்கின்றன. இதே பிரிட்டனில் ஒரு காலத்தில் யூத வெறுப்பு பலமாக இருந்தது, அதேபோன்று தற்போது யூதர்களும், மற்றவர்களும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எப்படி இருப்பினும் போரும், அது ஏற்படுத்தும் இதுபோன்ற வெறுப்பு உணர்வும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
(OI NEWS)
