ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல் – யாருக்குச் சொந்தம் என்பதில் போட்டாபோட்டி

சாண்டியாகோ வனேகஸ்
பதவி,பிபிசி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்கப்பல் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த கப்பலில் உள்ள பொக்கிஷம், உலகிலேயே அதிகம் தேடப்படும் பொக்கிஷங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கப்பலின் பாகங்களை கண்டுபிடிக்க ஆழ்கடலில் “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய” “உயர்மட்ட” ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.

சான் ஜோஸ் என்பது 40 மீட்டர் நீளமுள்ள ஸ்பானியக் கப்பலாகும். இந்த கப்பல் கொலம்பியாவின் கார்டஜீனா நகருக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டமான ரொசாரியோ தீவுகளைச் சுற்றி 1708-ல் மூழ்கியது.

2015-ம் ஆண்டு, அக்கப்பல் 600 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அரசு அறிவித்தது.

ஸ்பானிய மன்னரின் இறப்புக்குப் பிறகு, வாரிசுப் போரின் ஒரு பகுதியாக, சார்லஸ் வேகரின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைக்கும் ஸ்பெயின் படைக்கும் மோதல் மூண்டதாக, கடல்சார் மானுடவியல் பேராசிரியர் ரிக்கார்டோ பொரேரோ தெரிவிக்கிறார். அப்போது, சான் ஜோஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கப்பலில் என்ன இருக்கிறது?
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியாபட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,
இந்த கப்பல் விபத்தில் 600 பேர் உயிரிழந்தனர்.

20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் இக்கப்பலில் உள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர்.

“கப்பல்கள் வடிவமைப்பு 20-ம் நூற்றாண்டு வரை மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். தற்போதுள்ள உலகமயமாக்கலுக்கு இந்த தொழில்நுட்பம் பல வழிகளில் வடிவம் கொடுத்திருக்கிறது. இதனை போர்க்கப்பலாகவும் வணிக கப்பலாகவும் பல வழிகளில் பயன்படுத்த முடியும்” என்கிறார் ரிக்கார்டோ பொரேரோ.

இந்த கப்பல் 40 மீட்டர் நீளம் கொண்டது. 64 பீரங்கிகள் அதில் இருந்தன. கப்பலில் சுமார் 600 பேர் இருந்தனர்.

“17-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ம் நூற்றாண்டிலும் இக்கப்பல் உயர் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட கப்பலாக இருந்தது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்தும் அக்கப்பல் சரக்குகளை ஏற்றிச் சென்றிருக்கிறது” என்கிறார் அவர்.

இக்கப்பல், கொலம்பியாவின் சொத்தாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. அதனால் தான், அதன் மதிப்பை பண அடிப்படையில் கணக்கிடக் கூடாது என்று அரசாங்கம் பாதுகாக்கிறது.

எனினும், அக்கப்பலின் ஒருபகுதியை சொந்தமாக வைத்திருப்பதாக கூறும் அமெரிக்காவை சேர்ந்த புதையல்களை தேடும் வேட்டை நிறுவனம் ஒன்று, அப்புதையல் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளது .

இக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்த விவரங்கள், காப்பக ஆதாரங்களிலிருந்தே அறியவருகின்றன. மாறாக, கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அதனை நேரடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

2022-ம் ஆண்டில், தேசிய கடற்படை மற்றும் கொலம்பியாவின் தேசிய கடல்சார் இயக்குநரகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் கப்பலில் இருந்த பொருட்களின் புகைப்படங்கள் வெளியாகின. அப்புகைப்படத்தில் பீரங்கிகள், சில நாணயங்கள் மற்றும் சீன மேஜைப் பாத்திரங்கள் சிலவற்றைக் காண முடிந்தது.

“ஜாடிகள், பாத்திரங்கள், ஊசிகள், கண்ணாடிகள், பீங்கான்கள், சில நாணயங்கள் உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன” என, கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாற்று நிறுவனத்தின் இயக்குனர் (ICANH) அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.

600 மீட்டர் ஆழத்தில் உள்ள கப்பலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதுதான் கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

Exit mobile version