லண்டன்: உலகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பம், இதற்கு முன்னர் பதிவான வெப்பத்தை விட அதிகம் என காலநிலை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது கட்டுப்படுத்தப்படவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் எனில், தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் வெப்ப நிலை எவ்வளவு இருந்ததோ, அதை விட 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர நாம் அனுமதிக்கலாம். ஆனால் இது 1.5 டிகிரி செல்சியஸை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டம்: 1850-1900ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதுவரை மனித கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும், இயந்திரங்களால் உருவாக்கப்பட்டன. இயந்திரங்களின் வளர்ச்சி வேகமெடுக்க தொடங்கியதால், அதனை இயக்க தேவையான எரிபொருளின் பயன்பாடும் அதிகரித்தது. பூமிக்கடியில் இருந்து பெறப்படும், பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்டவையே இந்த இயந்திரங்களின் எரிபொருளாகும்.
வெப்பநிலை உயர்வு: எரிபொருள் பயன்பாட்டினால் கரியமில வாயு உமிழ்வு அதிகரித்து, உலகம் வேகமாக வெப்பமடைய தொடங்கியது. இதன் தாக்கத்தை விரைவிலேயே விஞ்ஞானிகள் கணித்தனர். பூமியின் துருவ பகுதியில் பல்லாயிரக்கணக்காக ஆண்டுகளாக உருகாமல் இருந்த பனிப்பாறைகள், இந்த தொழிற்புரட்சி காலத்தில் வேகமாக உருக தொடங்கியது. இதனால் உலகம் முழுவதும் கடல் மட்டம் உயர்ந்தது. மட்டுமல்லாது முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு பக்கம் கொடூரமான மழை, வெள்ளமும், மறுபக்கம் தாங்க முடியாத வெப்பமும் வாட்ட தொடங்கியது.
1.5 டிகிரி செல்சியஸை: எனவே வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வந்தன. அதாவது தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் எவ்வளவு வெப்பநிலை இருந்ததோ, அந்த நிலைக்கு பூமியை நிச்சயமாக மாற்ற முடியாது. ஆனால், அதை அதிகபட்சம் 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை நம்மால் அனுமதிக்க முடியும். அதை தாண்டும்போது இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் 1.5 டிகிரி செல்சியஸ் லிமிட்டை உலகம் விரைவில் கடந்துவிடும் என்று கூறுகின்றன.
C3S: இந்த சூழலில்தான் ஐரோப்பாவின் ‘கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை’ மையம்(C3S) முக்கிய ஆய்வை வெளியிட்டிருக்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை, இதற்கு முன்னர் பதிவானதே இல்லை என்று கூறியுள்ளது. இது பிப்ரவரி மாதத்திற்கு மட்டுமல்ல, கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை பதிவாகி உள்ளது என்று C3S கூறியுள்ளது. பிப்ரவரி: கடந்த பிப்ரவரி மாதத்தில் உலகம் முழுவதும் வெப்பநிலை சராசரியாக 13.54 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படி அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது இதை விட 0.12 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். கடந்த 12 மாதங்களில் (மார்ச் 2023-பிப்ரவரி 2024) உலக சராசரி வெப்பநிலை 1991-2020 சராசரியை விட 0.68 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், 1850-1900 சராசரியை விட 1.56 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ran-that-recorded-in-589085.html?story=1
