தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஜனாபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் எட்டப்படாமல் நிறைவு பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் இப்போதும் எமது மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றில் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை, காணி விடுவித்தல் தொடர்பான பிரச்சினைகளும் உள்ளடங்குகிறது.
இந்த மூன்று விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.எனினும் ஏற்கனவே இருந்த நிலைமையே தற்போதும் காணப்படுகிறது. எந்த முன்னேற்றமும் தற்போது கிடையாது.
அதேவேளை தற்போது அரசியலமைப்பில் உள்ள அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாம் வேண்டுகோள் விடுத்தோம். அதுதொடர்பிலும் எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
ஒரு வாரத்திற்குள் அது தொடர்பில் எமக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாம் மீண்டும் கூடுவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
