ரயில் சேவைகளை இரத்து செய்யும் தீர்மானத்தை விலக்கிக்கொள்ளவும்

அன்றாட ரயில் சேவைகளில் 42 சேவைகளை இன்று (13) முதல் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்கள உயரதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய அந்தத் தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு 42 ரயில் சேவைகளை ரத்து செய்வதற்கு, அதிகாரிகள் தீர்மானம் மேற்கொள்ளனர். ஊடகங்களும் இதுபற்றித் தெரிவித்தன.இதனைக் கவனத்திற் கொண்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, ரயில் சேவைகளை ரத்துச் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

60 வயதை பூர்த்தி செய்த அரசாங்க ஊழியர்கள் பெரும்பாலானோர் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் ரயில்வே துறையிலும் பெருமளவிலானோர் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர். இதனால்,கடந்த 11 தினங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் 300 ரயில் சேவைகளை ரத்துச் செய்ய நேர்ந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version