மார்ச் 20 ஆம் திகதிக்கு முன் பாடசாலைகளுக்கு விநியோகம்
சீன பதில் தூதுவரினால் கல்வி அமைச்சரிடம் கொழும்பு துறைமுகத்தில் நேற்று கையளிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடசாலை சீருடைத்துணிகள் நேற்று நாட்டுக்கு கிடைத்துள்ளன. சீன பதில்த் தூதுவர் ஹு வெய் (Hu Wei) கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் நேற்று உத்தியோகபூர்வமாக அதனை கையளித்தார்.
மாணவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான 70 வீத சீருடைத் துணியாக 88,62,990 மீற்றர் சீருடைத் துணி கிடைத்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி நேற்று இலங்கையிலுள்ள பதில் சீனத் தூதுவர் ஹு வெய் யினால் கல்விஅமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவிடம் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக சீருடைத்துணிகள் யாவும் வெட்டப்பட்டு பொதியிடப்பட்டுள்ளது. சீருடைத்துணிகளின் எஞ்சிய 30 வீதமானவை விரைவில் கிடைக்குமென்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்பதாக நாட்டிலுள்ள 41 இலட்சம் மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் பாடசாலைகள் அனைத்துக்கும் வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த வருடத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குவதற்காக சீனாவினால் நன்கொடையாக வழங்கப்படும் அரிசி முழுமையாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் சீனத் தூதுவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
