அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சமீபத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் வொஷிங்டன் மாகாணம் யாக்கிமா நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சர்க்கிங்கே வியாபர நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில் கடையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த குறித்த இளைஞர் சுட்டதில் மேலும் ஒருவர் பலியானார். அதன்பின் துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

அவரை பொலிஸார் தேடி வந்த நிலையில் அந்த இளைஞர் ஒரு கிடங்குக்கு பின்னால் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு பொலிஸார் சென்று இளைஞரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொலிஸார் கூறும்போது, “துப்பாக்கி சூடு நடத்திய நபர் 21 வயதான ஜரிட் ஹெடக் என்பது தெரியவந்தது. அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு முன்பு தனது தாயிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். அவருக்கும் சுட்டுகொல்லப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை'” என்றனர்.

Exit mobile version