பாம்புகள் கனவில் வந்தால், பலன்கள் பரிகாரங்கள்!

கனவுகள் சொல்லும் பலன்கள் ஏராளமானவை. குறிப்பாக, ‘பாம்புகள் கனவில் வந்தால் மிகப்பெரும் கஷ்டம் நம்மைச் சூழும் என்றும், கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்மைப் பீடித்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும்’ என்றும் பொதுவாக  ஒரு கருத்து நிலவுகிறது. இதைப் பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கருத்து கேட்டோம். 

”நம் மூதாதையர்கள் கிராமம் சார்ந்த விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தனர். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் நம்மை ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த வேளையில், சூரியன் மற்றும் சந்திரனின் போக்கை வைத்து நேரத்தைக் கணிப்பது, சகுனங்கள், நிமித்தங்கள் , கனவுகள் ஆகியவற்றின் பலன்களைப் பார்ப்பது ஆகியவை வழக்கில் இருந்து வந்துள்ளன. இவற்றை  தங்களின் வழிகாட்டியாகவும் நம் மரபு சார்ந்த விஷயமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.


நீண்ட நெடுங்காலமாக பாம்பை  வழிப்பாட்டுக்கு உரியதாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதையொட்டியே பெண்கள் அம்மன் ஆலயங்களில் நாக வழிபாடு செய்வது, புற்றுக்குப் பால் வார்ப்பது போன்ற வழிபாடுகள் செய்வதை தொன்றுதொட்டே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இதனால் பாம்புகள் குறித்த சகுனங்கள், நம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் இருந்து வருகின்றது. 

‘கனவுகளே வாழ்க்கை இல்லை. கனவுகள் இல்லாமலும் வாழ்க்கை இல்லை’ என்று சொல்லுவார் கமல்ஹாசன். பிறந்து சில நாள்களான பச்சிளம் குழந்தைகள்கூட கனவு காண்பதுண்டு. அவர்கள் தூக்கத்தில் புன்னகைப்பதையும் மருட்சியோடு விழித்துக்கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தில் கனவுகள் வருவது தவிர்க்க முடியாத விஷயம். அதேபோல் காணும் கனவுகளுக்குப் பலன்கள் உண்டு என்னும் நம்பிக்கையும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. 

ஜாதகருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெற்றால், அவரது கனவில் பாம்பு வரும்.  ஏழரைச் சனி நடைபெற்றால் பாம்பு கனவில் வரும் என்பதெல்லாம் தவறான வாதம். ஏழரைச் சனி நடந்தால், மனம் அவஸ்தைப்படும். அதனால் நல்ல தூக்கம் இருக்காது. 

பாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதுநாள் வரை குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால், குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். அந்தப் பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும். இரண்டாவது வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெறலாம். 

பாம்பு கனவில் வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக  தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும். பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால்,  ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி  ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும்.

Exit mobile version