சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு வலியுறுத்துகிறது.

மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

அப்படியானால், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் நன்மைகளைப் பெற முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நலன்புரி சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒன்லைன் மூலம் 3.7 மில்லியன் மக்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதியை சரிபார்க்கும் பொருட்டு, மாவட்டச் செயலகத்தில் உள்ள கள உத்தியோகத்தர்களைக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3.7 மில்லியன் பேர் பயன்பெற விண்ணப்பித்திருந்தாலும், இதுவரை 65,000 பேர் மாத்திரமே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு கள உத்தியோகத்தர் ஒருவருக்கு 300 ரூபா சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கள உத்தியோகத்தர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தாமல் செயற்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பயனாளிகளின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து உரிய தகவல்கள் சேகரிக்கப்படுவதாக சில கள அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புவதால், சில விண்ணப்பதாரர்கள் இதற்கான தகவல்களை வழங்க தயங்குவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும், தகுதியுடையவர்களாக இருந்தால், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் நிதியமைச்சு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்பவர்கள் மாத்திரமே சமுர்த்தி உட்பட 52 நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என வலியுறுத்தப்படுகிறது.

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கோ அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கோ சென்று மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது. .

Exit mobile version