தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை..!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என்றார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெனிவில் லெர்மிட் மனநல வைத்தியரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது சட்டத்திரணிகள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version