வவுனியா குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (07) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
