வடக்கு நைஜீரியாவில் கடந்த திங்கட்கிழமை இரவு நைகர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த படகு மேற்கு மாநிலமான குவாராவில் பயணித்துக்கொண்டிருந்தது. பயணிகள் பலர் அருகிலுள்ள நைகர் மாநிலத்தில் இடம்பெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் குறைந்தது 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நைஜீரியாவில் ஆற்றுப் படகு விபத்துக்கள், கூட்ட நெரிசல், மோசமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் குறைவால் ஏற்படுவது வழக்கம். கடந்த மே மாதம் வடமேற்கு மாநிலமான சொகோடோ வழியாக பயணித்த படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 குழந்தைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
