ரிலீஸான நாலே நாளில் ரூ. 25 கோடி வசூலித்த மாமன்னன்:கூட்டத்தை ஈர்க்கும் வடிவேலு

Maamannan Box Office Collection:மாமன்னன் படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸானது.

இந்நிலையில் நான்கு நாட்களில் மாமன்னன் ரூ. 25 கோடி வசூல் செய்திருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

படத்தில் எம்.எல்.ஏ. மாமன்னனாகவே வாழ்ந்திருக்கிறார் வடிவேலு. படம் பார்த்த அனைவரும் அது பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக பேசி வருகிறார்கள். பாசிட்டிவ் விமர்சனங்களை பார்த்துவிட்டு தான் பலரும் தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மாமன்னனுடன் சேர்ந்து எந்த பெரிய படமும் ரிலீஸாகவில்லை. ஜூலை 15ம் தேதி வரை எந்த பெரிய பட ரிலீஸும் இல்லை. அதனால் அதுவரை தியேட்டர்களில் மாமன்னனின் ஆதிக்கம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலினின் கெரியரில் பெரிய ஓபனிங் கிடைத்த படம் மாமன்னன். இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வெளியாகி பெரிய ஓபனிங் பெற்ற நான்காவது படமாக உள்ளது மாமன்னன்.

மாரி செல்வராஜை நம்பி அவர் அரசியல் சொல்லும் படத்தில் நடித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார் மாரி செல்வராஜ்.

படம் பார்க்கும் அனைவரும் வடிவேலுவின் நடிப்பை பற்றி தான் பிரமாதமாக பேசி வருகிறார்கள். அவரால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபித்துவிட்டார்.

படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பை பார்த்து மாமன்னன் குழு சந்தோஷத்தில் இருக்கிறது. நேற்று முன்தினம் சக்சஸ் பார்ட்டி வைத்து கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். அதில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார்.

தன் கடைசி படத்தை வெற்றிப் படமாக்கிய மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை பரிசளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். வடிவேலுவுக்கு கிடைக்கும் பாராட்டுகளை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பொறாமைப்படவில்லை மாறாக சந்தோஷப்படுகிறார்.

மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் உதயநிதி. அமைச்சராக இருக்கும் அவர் முழு நேரமும் மக்கள் சேவை செய்ய விரும்புகிறார். அதனால் தான் நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவை எடுத்தார். அவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பிடிக்ககவில்லை. இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் சொல்வதில் இருக்கும் நியாயம் அவர்களுக்கு புரிந்துவிட்டது.

இருப்பினும் இந்த முடிவு நிலையானதாக இருக்க வேண்டாம். மீண்டும் நடிக்க வாருங்கள் அண்ணா என ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மாமன்னன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வடிவேலுவுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என நடிகை மாலா பார்வதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது தான் மிகவும் சரி என சினிமா ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

படம் ரிலீஸானதில் இருந்து சமூக வலைதளங்களில் ஒரே மாமன்னன் பேச்சாக தான் உள்ளது. அந்த படத்தில் வந்த மாமன்னன் நிஜத்தில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் என்று பேசப்படுகிறது. அப்படி என்றால் ரத்னவேலு கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியோ என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Exit mobile version