ஓவரா பால் கொடுத்து, இன்சுலின் ஊசி போட்டு 7 குழந்தைகள் கொலை.

புதிதாக பிறந்த 7 பச்சிளங் குழந்தைகளை கொலை செய்த இங்கிலாந்தை சேர்ந்த நர்ஸ்க்கு தண்டனை விதித்து மான்செஸ்டர் க்ரவுன் நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நிலையில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குழந்தைகளை பெற்றெடுப்பதற்குள் தாய், தந்தையர் படும் சிரமங்கள் ஏராளம். இவை எல்லாவற்றையும் தாண்டி பத்திரமாக பெற்றெடுத்து நன்றாக வளர்க்க வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருப்பர். ஆனால் மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில நாட்களில் வீட்டிற்கு கூட கொண்டு செல்லாமல் உயிரிழந்துவிட்டது என்றால் எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அதுவும் நர்ஸ் ஒருவரால் குழந்தை கொலை செய்யப்பட்டு விட்டது என்றால் அந்த கொடூரத்தை நினைத்து பார்க்க முடியுமா?

இங்கிலாந்தில் அதிர்ச்சி

பெற்றோரால் தாங்கி கொள்ள முடியுமா? இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள கவுண்டெஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தவர் லூசி லெட்பி. இவருக்கு வயது 33. இவர் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். குழந்தை பிறந்ததும் அவற்றை கொலை செய்ய விநோதமான திட்டங்களை தீட்டி அதை அரங்கேற்றி இருக்கிறார்.

எப்படி கொலை செய்தார்?

அதாவது, பிறந்த பச்சிளங் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் கொடுத்து திணற வைத்து கொலை செய்துள்ளார். இதுதவிர இன்சுலின் போட்டு கொலை செய்திருக்கிறார். மேலும் வெறும் ஊசியை குழந்தையின் உடலில் போட்டு காற்றை உட்செலுத்தி கொலை செய்துள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல. மொத்தம் 7 குழந்தைகளை கொலை செய்தார் நர்ஸ் லூசி லெட்பி. நர்ஸாக இருந்து கொண்டு இப்படி ஒரு கொடூரத்தை எப்படி அவரால் நிகழ்த்த முடிந்தது? என்ற கேள்வி பலரையும் வாட்டி வதைத்து வருகிறது.

பச்சிளங் குழந்தைகள் கொலை

இவர் பணியாற்றிய வார்டில் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்ததால், 2016ல் லூசி லெட்பி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நர்ஸ் மீது சந்தேகம் எழவே 3 முறை கைது செய்யப்பட்டார். ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபரில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் லூசி லெட்பி கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில மருத்துவ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆயுள் தண்டனை

அதில், “நான் ஈவு இரக்கமற்றவள், நான் தான் இதை செய்தேன்” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இதையடுத்து மான்செஸ்டர் க்ரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நர்ஸ் லூசி லெட்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி க்ரோஸ் தீர்ப்பளித்தார். நர்ஸ் கொலை வழக்கில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Exit mobile version