இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மூன்று தேர்தல்கள் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றை நடத்த குறித்த நிதி தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டு்ள்ளார்.
எனினும், இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு மாதங்கள் உள்ள காலப்பகுதியில் நாட்டில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் இரண்டரை வருடங்களை கடந்ததை தொடர்ந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாமென அவர் கூறியுள்ளார்.
இதற்கான முழு அதிகாரமும் சிறிலங்கா அதிபருக்கு இருப்பதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
