மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் போது அறவிடப்படும் 3,000 ரூபாய் என்ற கட்டணத்தை மின்சார பட்டியல் கட்டணத்துக்கு ஏற்ப குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பாதீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த, வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1,000 ரூபாய் அல்லது 500 ரூபாய் என்ற மின்சார பட்டியல் கணக்கை கொண்ட பாவனையாளர்களுக்கும் மின்சாரத்தை துண்டித்து மீள இணைக்கும் போது 3,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகிறது.
இதற்கமைய, நேற்றைய தினம் இடம்பெற்ற பணிப்பாளர் சபை கூட்டத்தில் அந்த கட்டண முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள இணைப்பதற்கு அறவிடப்படும் கட்டணத்தை, மின்சார பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்துக்கு ஏற்ப அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
