முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து தமது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றோல் போத்தலை எடுத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டியின் முன்பகுதியில் புத்தர் சிலையும் ஒரு ஜோடி தந்தச் சிலைகளும் வைத்திருப்பது போக்குவரத்து சட்டப்படி குற்றம் என்று சுட்டிக்காட்டி அதற்கான அபராதச் சீட்டு வழங்காமல் முச்சக்கர வண்டி சாரதியிடம் இருந்து பலவந்தமாக பெற்றோல் போத்தலை எடுத்துச் சென்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குருநாகல், இங்குருவத்த பொலிஸில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் வெலேகெதர பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன் ஒருவருமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத்தின் விசேட பணிப்புரையின் பேரில் குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவினால் இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
