‘‘தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான். ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்’’
சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் ஒருவர் மரணித்த பிற்பாடு அம் மத்ரஸாவின் நிர்வாகியான மெளலவி சானாஸ் சொன்ன வார்த்தைகள்தான் இவை.
பின்னர் தன்னால் அடித்து வளத்தாட்டப்பட்ட மாணவனை பாம்பு கடித்துவிட்டதாகவும், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் நாடகமாடியவரும் இதே மெளலவிதான்.
இச் சம்பவம் தற்கொலைதான் என கதை பரப்பி குறித்த மெளலவி தப்பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களும் சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மெளலவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என அம் மத்ரசாவில் உதவியாளராக கடமையாற்றிய சாய்ந்தமருதைச் சேர்ந்த பெண்மணியைச் சந்தித்து உரையாடினோம். அவரது வாக்குமூலத்தை அவ்வாறே தருகிறோம்.
‘‘ நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்த போது மரணித்த மாணவனான முஸ்அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தார். பின்னர் நான்கரை மணியளவில் மத்ரசாவிலிருந்து வீட்டுக்கு வந்து மீண்டும் 6.30 மணியளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்து முடிந்திருக்க வேண்டும்.
நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளிவாக கேட்டது.
அப்போது நான் ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர் யாரை அடித்துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை. பின்னர் நான் எதற்கு அடித்தீர்கள் என்று கேட்டேன். ‘நின்று கொண்டு தலையில் தொப்பி இல்லாமல் சூ பேய்ந்தான்’ என்று கூறிவிட்டு அத்துடன் கதையை மௌலவி நிறுத்தி விட்டார்.
பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான். அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்துவிட்டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
அந்த நேரம் மௌலவியின் சகோதரர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். பின்னர் மரணித்த மாணவனை பாத்ரூம் பகுதியில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். என்ன என்று கேட்டேன். முஸ்அப் மயங்கி விழுந்துவிட்டான் என மௌலவி கூறினார்.
எப்படி மயக்கமுற்றார் என நான் மாறிக் கேட்ட போது ‘பாம்பு கடிச்ச’ என்றார் மௌலவி. பின்னர் பாத்ரூமுக்குள் பாம்பா என நான் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் தரவில்லை.
அப்படியென்றால் மயக்கமுற்ற மாணவனுக்கு முதலுதவி செய்யுங்கள் என்று சொன்னேன். ஆனால் மெளலவி அதை கணக்கெடுக்கவில்லை. அதேநேரம் மாணவர்கள் ஏனைய முஅல்லிம்கள் எல்லோரும் மேல்மாடியிலேயே நின்றார்கள். இது அனைவருக்கும் தெரியும். பின்னர் மாணவனுக்கு சிலர் முதலுதவியை செய்தார்கள். இதனை கீழே இருக்கின்ற சி.சி.ரி.வி. கமராவில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் ஓடி வந்து ‘அந்த பொடியன் மௌத்தாகிட்டான்’ என்று சொன்னான். அவ்வாறு சொன்ன மாணவன் அந்த மரணித்த மாணவனின் உறவுக்காரராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
அதன் பிறகு மற்றொரு மாணவர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப் பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.
அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார். பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டேன். கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்ளைகளிடம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மரணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன். அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன். நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்றார்.
நடந்த விடயங்களை பொலிசாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள இப் பெண்மணி தொடர்ந்தும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சிசிரிவி பதிவுகளை அகற்றக் கோரிய மெளலவி
அதேபோன்றுதான் சிசிரிவி பதிவுகளை அகற்றிச் சென்றவர்களும் நடந்த விடயங்களை பொலிசாருக்கு வாக்குமூலமாக வழங்கியுள்ளனர். இம் மத்ரசாவில் சிசிரிவிகளை பொருத்திக் கொடுத்த சேவை வழங்குனரை நாம் சந்தித்துப் பேசினோம்.
‘‘ சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து சிசிரிவி பதிவுகளை அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு நான் என்னால் வரமுடியாது என கூறிவிட்டேன். அத்துடன் ஏன் அவற்றை அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். பின்னர் இரவு 11 மணியளவில் மத்ரசாவில் மாணவர் ஒருவர் மரணித்துவிட்டதாக பதற்ற நிலை ஏற்பட்ட பின்னர்தான் எனது சகோதரர் என்னைத் தொடர்பு கொண்டு நாங்கள் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் தான் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.
நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு சிசிரிவியில் பதிவாகியிருந்த காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதாகவும் ஹார்ட் டிஸ்கினை அகற்றிச் செல்லுமாறும் மூன்று தினங்களின் பின்னர் அதனைக் கொண்டு வந்து பொருத்தித் தருமாறு கேட்டதாகவும் சொன்னார். இதற்காக 1000 ரூபா பணத்தையும் மெளலவி வழங்கியுள்ளார். அதுமாத்திரமன்றி பதற்ற நிலை தோன்றிய பிறகு குறித்த மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பை எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சிசிரிவியை அகற்றிய மூவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதேபோன்றுதான் இம் மத்ரசாவில் கல்வி கற்று சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னராக விலகி வீடு சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும் நாம் சந்தித்தோம். மத்ரசாவின் அதிபரான சானாஸ் மெளலவி எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வார் என்பதை அவரது அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
நானும் ஜனாஸாவாகத்தான்
வந்திருப்பேன்’’
‘‘மதரசா அதிபர் மௌலவி அவர்கள் மாணவர்களை தாக்குவார். வயர், திரைச்சீலையை தொங்க விடும் பொல்லு, தடி போன்றவைகளி னாலேயே தாக்குவார். அங்குள்ள சிரேஷ்ட மாணவர்கள் எங்களைப் போன்ற சின்ன வகுப்பு மாணவர்களை வேண்டுமென்றே பிழையாக சொல்லிக் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அவர் எங்களைத் தாக்குவார். என்னையும் பல தடவைகள் தாக்கியுள்ளார்.
