கட்டுரை தகவல்
எழுதியவர்,வக்கார் முஸ்தஃபா
பதவி,பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில், வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பள்ளியின் புகைப்படத்தின் மீது அரபு மொழியில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்னை கவனிக்க வைத்தது.
இந்த மொழியைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பதால், இந்த வார்த்தைகள் என்னவென்று தெரிந்தது. அதில், ‘ஜைனப் அல்-நஃப்சாவியா – பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளி’ என எழுதப்பட்டிருந்தது.
அருகிலுள்ள பலகையில் உள்ள புகைப்படத்திலிருந்து, 1009 முதல் 1106 வரை வாழ்ந்த இந்த ராணி, யூசுப் பின் தாஷ்ஃபினின் மனைவி என்பது தெரியவந்தது. தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான இபின் கல்தூனின் கூற்றுப்படி, “அவருடைய அழகு மற்றும் தலைமைத்துவத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமான பெண்களில் ஒருவராக” அறியப்படுகிறார்.
பாரம்பரிய நீல தலைப்பாகை அணிந்த, எளிய பாலைவனம் மற்றும் பெர்பர் இனத்தின் சிறந்த தளபதியின் ராஜ்ஜியம், ஆப்பிரிக்காவின் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து இன்றைய மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் ஸ்பெயினின் பகுதிகள் வரை பரவியது என்று யூசுப் பின் தாஷ்ஃபீனைப் பற்றி படித்திருக்கிறேன்.
இபின் கல்தூன் ஜைனபின் தலைமைத்துவத்தைப் பற்றிப் பேசியதால், அவர் குறித்தத் தகவல்களைப் பெற விரும்பினேன். இஸ்லாமிய வரலாற்றின் புகழ்பெற்ற பெண் தலைவரான ஜைனப் அல்-நஃப்ஸாவியாவின் வாழ்க்கையை அறியும் எனது பயணத்தில் கிடைத்தவற்றை இங்கு தருகிறேன்.
மொராக்கோ எழுத்தாளர் ஃபாத்திமா மர்னிஸ்ஸி தனது ‘ஃபார்காட்டன் குயின்ஸ் ஆஃப் இஸ்லாம்’ (Forgotten Queens of Islam) புத்தகத்தில் அந்த ராணிக்கு முக்கிய இடம் அளித்துள்ளார்.
1061 மற்றும் 1107-க்கு இடையில் வட ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயின் வரை பரவிய மிகப் பெரிய ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஜைனாப் அல்-நஃப்ஸாவியா இருந்தார். மேலும் அவர் தன் கணவர் யூசுப் பின் தாஷ்ஃபினுடன் ஆட்சி செய்தார்.
வரலாற்றாசிரியர்கள் ஜைனப்பை ‘அல்-குய்மா பம்லகிஹி’ என்று அழைத்தனர், அதாவது, அவரது கணவரின் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர் அல்லது அதை இயக்கும் முக்கிய கதாபாத்திரம் என இதற்கு அர்த்தம்.
