அரச வருவாயை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுங்க திணைக்களம் மற்றும் கலால் திணைக்களத்தின் ஊடாகவும் அரச வருமானத்தை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.

ஐஆர்டி ஊழியர்களின் திறமையை அதிகரித்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க முடியும் என்றார்.

“நாங்கள் பணத்தைக் கண்டுபிடிக்க முடியும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் கலந்துரையாடியுள்ளோம். திணைக்களத்தில் பயன்படுத்தப்படும் சட்டங்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பணியாளர்களின் செயல்திறனை அதிகரித்தால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்கலாம். ஐஆர்டி, சுங்க மற்றும் கலால் துறைகளில் இருந்து கிடைக்கும் வருவாயையும் அதிகரிக்க முடியும், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து கலால் துறை சுமார் ரூ.90 பில்லியன் நிலுவையில் உள்ளது,” என்றார்.

NPP அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் மக்களின் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதி செய்யும் என்று திஸாநாயக்க கூறினார்.

ரத்தின வளங்கள், தேயிலை தொழில், சுற்றுலா மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரத்தை புத்துயிர் பெற நீண்ட கால திட்டங்களை வகுத்துள்ளோம் என்றார்.

Exit mobile version