டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சில மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துகளின் விலைகளை உயர்த்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 60 வகை மருந்துகளின் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் பெறுமதி குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மருந்துகளின் விலைகளும் உயராது என்றாலும், சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
