கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்தை காட்டில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சந்தே நபரை கடந்த 10 ஆம் திகதி பொலிஸாரும், இராணுவத்தினரும் மீட்டுள்ளனர்.
சில தினங்கள் உணவு எதுவுமின்றி இருந்துள்ள சந்தேக நபரை பொலிஸார் பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 31 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில், கைதிகளில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான பதற்றமான நிலைமையில் பல கைதிகள் தப்பியோடினர். அவ்வாறு தப்பியோடிய கைதிகளில் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
