காசாவின் சனநெரிசல் மிக்க அகதி முகாம் ஒன்றில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் 10 சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜபலியா அகதி முகாமில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவே இந்த விபத்துக்குக் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜபலியா காசாவில் உள்ள எட்டு அகதி முகாம்களில் ஒன்றாகும். இந்தத் தீ விபத்தில் ஒட்டுமொத்த கட்டடமும் கருகியுள்ளது சமூக ஊடகத்தில் வெளியான படங்கள் காட்டுகின்றன.
தீ ஏற்பட்டபோது மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியே ஓடுவதும், உறவினர்கள் வீதியில் நின்று பிரார்த்திப்பதும் தெரிகிறது. 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசா பகுதி உலகில் அதிக சன நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாகும். இங்கு உள்ள எட்டு அகதி முகாம்களிலும் சுமார் 600,000 அகதிகள் வாழ்வதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
