பழமையான பொருளாதார முறைமைக்குப் பதிலாக 2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாடிதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது வெளிநாட்டு அந்நியச்செலாவணியே என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு நேற்று (05) கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் மின் சக்தித் துறைக்கு மாத்திரம் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்படவுள்ளதாகவும் இதனால் இச்செலவை மீளப் பெற்றக்கொள்வதற்கான மாற்றுவழிகளைத் தேட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser), இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, இந்திய என்.ஐ.டி.ஐ யின் பிரதம நிறைவேற்ற அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது-
உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser), வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள்.

இந்த ஆண்டைப்போல முன்பு எந்தவொரு ஆண்டும் இல்லையென தொடக்க உரையில், தொகுப்பாளர் கூறினார். அது சரியானதே. நான் பின்னோக்கி மீட்டுப் பார்த்தேன். 20 ஆம் நூற்றாண்டிலோ அல்லது 19 ஆம் நூற்றாண்டிலோ ஒரு வருடம் கூட இவ்வாறு இருக்கவில்லை.

எம்மிடம் இருப்பது உள்நாட்டு யுத்தம் அல்ல. முன்னர் இந்தப் பிராந்தியத்தைச் சூழ உள்நாட்டு யுத்தம் இருந்தது. ஆனால் எங்களிடம் பயங்கரவாதம் இல்லை. நாம் அவையனைத்தையும் கடந்து வந்துள்ளோம். நாம் கிளர்ச்சிகளை கடந்துள்ளோம். கலவரங்களை கடந்துள்ளோம். இது ஒரு பொருளாதார சரிவு மட்டுமே.

எனினும் அது ஒரு யுத்தகளமாகும். அரசியல் வாதிகளுக்கு தமது ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வியாபாரிகளுக்கு தமது இலாபத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. மேலும் நாடு தங்களுக்கு எதைப் பெற்றுத் தரும் என்பதைப் பார்க்க பலர் ஆவலாக இருந்தனர். எவ்வித சேவையையும் வழங்காது இலவசமாக அவர்களுக்கு என்ன கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். நீண்ட காலத்துக்கு இதே கொள்கை முறையை பின்பற்ற முடியாது.

‘ராஜகாரிய’ முறை ஒழிக்கப்பட்டு, கோல்புரூக் கெமரோன் மறுசீரமைப்புடன் இலங்கை ஒரு நவீன வணிக பொருளாதாரமாக உருமாறியபோதே, ஆங்கிலேயர் உள்ளே வந்தனர். அவர்களிடம் வங்கி இருக்கவில்லை. அவர்களிடம் பணம் சம்பாதிக்க எந்த வழியும் இல்லை. அவர்களுக்கு சலுகை அடிப்படையில் உதவி செய்ய உலக வங்கி இருக்கவில்லை. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர் தேயிலை பயிரிட்டபோது, நாங்கள் தெங்கு பயிர்ச் செய்கையை மேற்கொண்டோம். நாம் எமது காரீயத்தை சுரண்டினோம். பின்னர் 1948 இல் போர் முடிந்த சந்தர்ப்பத்தில் நாம் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இருந்தோம். ஆனால் நாம் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் இருந்தே அதனை அழிக்க ஆரம்பித்தோம். ஒரு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பித்தோம். அதன் பின்னர் நாம் எமது வழியில் சென்றோம். அது பற்றி இங்கு கூறாமல் இருப்பதே சிறந்தது.

எனவே இரண்டு வருட கொவிட்டினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் உருவான வருமானக் குறைப்பு மற்றும் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் என்பன ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே நாம் அந்த கொந்தளிப்பில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும்.

ஜூலை முதல் கடந்த சில மாதங்களாக எங்களுடைய சொந்த முயற்சியால் நிலைபெற முடிந்தது. பலதரப்பு எங்களுக்கு வழங்கிய உதவியுடன் ஓகஸ்டில் இருந்து நாங்களே அதைச் செய்ய வேண்டியிருந்தது.

IMF உடன் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம். நாங்கள் இப்போது எங்கள் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். இந்தியாவுடன். மிகவும் வெற்றியளிக்கக்கூடிய வகையில் எமது பேச்சுக்கள் அமைந்தன. நாம் சீனாவுடனும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். அவர்கள் எம்மை எக்சிம் வங்கியுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

கட்சி மாநாட்டிற்குப் பிறகு தொடங்க வேண்டியிருந்ததனாலேயே சீனாவுடனான பேச்சுவார்த்தை தாமதிக்கப்பட்டது. இதுவரை எந்தவொரு பெரிய பிரச்சினையும் வரவில்லை. நாங்கள் அதை விரைவாக முடிக்க முடியும் என்று நம்புகிறோம். அதற்காக நாம் எமது பாதைக்கு வெளியே இருக்கிறோம் என்பது அர்த்தமல்ல.

அடுத்த வருடத்தை நாம் 300 தொடக்கம் 400 பில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கவுள்ளோம். அதுவே இலங்கை மின்சார சபைக்காக செலவாகப் போகிறது. நாம் அங்கிருந்து ஆரம்பிப்போம். நாம் அதை எவ்வாறு கையாள்வது? உங்களுக்கு அரசாங்கம் இதற்கு நிதியளிக்க வேண்டுமாக இருந்தால், அச்சு இயந்திரத்தை செயற்படுத்தும் நிலை தான் எமக்கு ஏற்படும்.

அதாவது, கரி மற்றும் எரிபொருளின் விலையதிகரிப்புக்கு மட்டுமன்றி, மோசமான நிர்வாகத்துக்காகவும் நாம் பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

இப்போது எம்மிடமுள்ள முதல் பிரச்சினை இதுதானா? விலைகளை சரிசெய்வதுடன் விளைவுகளை சந்திப்பதா? அல்லது நாம் எதனையும் செய்யாது யாராவது எமக்கு உதவுவார்கள் என்று இருப்பதா? தற்போது முதலாவது கேள்விக்கு நாம் அனைவரும் பதிலளித்தேயாக வேண்டும்.

இரண்டாவதாக நாம் எமது வங்கிகளைப் பார்க்க வேண்டும். நாம் எமது வங்கிகளை பாதுகாக்க வேண்டும். சொல்வதைப் பார்க்கிலும் அதனை செய்வது கடினம்.

வங்கியின் நிலை குறித்து நான் உங்களிடம் பேச வேண்டியதில்லை. என்னை விட உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். வட்டி விகிதங்களுக்கு என்ன நடக்கும்? என்பதை அறிய நீங்கள் அனைவரும் ஆவலாக இருக்கின்றீர்கள். வணிகத்தைத் தொடர வட்டி விகிதங்களில் சில நிவாரணத்தைப் பெற நீங்கள் விரும்புகின்றீர்கள்.

அந்நோக்கத்தை நான் புரிந்து கொண்டதுடன் அதனை பாராட்டுகின்றேன். அதிக வட்டி விகிதத்தில் வியாபாரம் செய்வது எளிதல்ல. மறுபுறம், மத்திய வங்கியும் பொருளாதாரத்தைக் கையாள வேண்டியுள்ளது.

எனவே சில வேளை, அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த இரண்டு விடயங்களையும் கருத்திற் கொண்டு கூட்டங்களை நடத்தலாம். அதில் ஒன்று பொருளாதாரத்தை வலுப்படுத்துவது. இரண்டாவது தனியார் துறையினருக்கு எவ்வகையான நிவாரணத்தைக் கொடுப்பது என்பது. சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையிலேயே எமது பிரதான கவனம் உள்ளது. அவை சரிவடைவதை அனுமதிக்க முடியாது. ஆனால் அவை மிக மோசமான நிலையிலேயே உள்ளன. எனவே நீங்கள் அதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும். அரச மற்றும் தனியார் துறையினர், பாரிய பங்குதார்ர்கள், நடுத்தர பங்குதார்ர்கள் என அனைவரும் சிறிய மற்றம் நடுத்தர கைத்தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

அவையே மிகப் பெரியவை, ஆனாலும் இவை துடைத்தெறியப்பட முடியாதவை. அவை இல்லாமல் எம்மால் பயணிக்க முடியுமா? திறந்த பொருளாதாரத்தின் வெற்றியானது பெரும் எண்ணிக்கையான சிறிய மற்றம் நடுத்தர கைத்தொழில் துறைகளின் வரவிலேயே தங்கியுள்ளது. மக்கள் தங்கள் வழியை உருவாக்கினர். அவர்கள் நடுத்தர வர்க்கம் வரை வந்ததுடன் அதனையும் தாண்டிச் சென்றனர். சிலர் பில்லியனியர்கள் ஆனார்கள். அவ்வாறே இந்த முறைமை வேலை செய்கின்றது. எனவே நாம் இவ்விரண்டு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்திரத்தன்மைக்குப் பின்னர் நாம் என்ன செய்வது? மறுசீரமைப்பு தொடர்பில் எவ்வாறான திட்டம் உள்ளது? மறுசீரமைப்பு தொடர்பில் என்னிடம் எவ்வித திட்டமும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறுகிறேன். எனக்குத் தெரியவில்லை. நெருக்கடியின்போது மறுசீரமைப்புகளுக்காக வேலை செய்ய முடியும். உங்களிடம் பொருளாதாரம் இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நாம் என்ன எதிர்கொள்ளப் போகிறோம்? பலதரப்பு டெல்டாவின் கடன் வழங்குனர்கள், தனியார் கடன் வழங்குனர்கள் என நாம் யாரிடமிருந்து என்ன நிவாரணத்தைப் பெற்றாலும், நாம் இப்பணத்தை நீண்ட காலத்திற்கு திருப்பிச் செலுத்த வேண்டும். அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாங்கள் கடன் வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வர்த்தக இருப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை. எனவே நாம் அதே கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பப் போகிறோமா?. அதனை மறுசீரமைப்பது பிரயோசனமற்றதென்றே நான் கருதுகின்றேன். எனவே மறுசீரமைப்பு தொடர்பில் என்னிடம் எவ்வித தனிப்பட்ட திட்டங்களும் இல்லை. 2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் நாம் வலுவான புதிய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். தனியார் துறை அதற்கு தயாரா? அந்த ஒரு கேள்வியை மட்டுமே நான் உங்களிடம் முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் அதற்கு தயாரா? நீங்கள் சவால்களை எதிர்கொள்வீர்களா? அதனுடன் வரும் வலிகளையும் தாங்கிக் கொள்ள முடியுமா? நாம் மீண்டும் ஒளிந்து கொள்ளப் போகின்றோமா?

தீக்கோழியால் எல்லா நேரங்களிலும் தனது கழுத்தை கம்பளத்தின் கீழ் வைத்திருக்க முடியாது. சில நேரங்களில் அதற்கு வெளியே வர நேரிடும். உங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? முதலில் வெளிநாட்டு அந்நியச் செலாவணியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். வர்த்தக சமநிலையை ஏன் எம்மால் வைத்திருக்க முடியாது? அது ஏன் மேலதிகமாக இருக்க முடியாது? உங்களால் அதனை மேலதிகமாக வைத்திருக்க முடியுமா? இல்லையென்றால் எங்களால் வாழ முடியாது.

நீங்கள் வாழ வேண்டுமாக இருந்தால் நீங்கள் உலகுடன் பேட்டியிட்டாக வேண்டும். எனவே, நாம் போட்டித் தன்மையுடையவர்களாக இருக்க வேண்டும். சாதாரண போட்டித்தன்மையல்ல உச்சக்கட்ட் போட்டித்தன்மையுரடயவர்களாக இருக்க வேண்டும். ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும். நீங்கள் சீனாவுடன் ஜப்பானுடன் கொரியாவுடன் மற்றும் இந்தியாவுடன் போட்டியிட வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ளுங்கள். 2050க்கு செல்ல நாம் தயாரா? நீங்கள் எப்படி 1950க்கு செல்ல விரும்புகிறீர்கள்?

எனவே நாம் மிகுந்த போட்டித்தன்மையுள்ள சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். ஆனால் நாம் அனைவரும் இந்த இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நிலையில், அது ஒரு சிலருக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சிலருக்கு அது மிக மிக கடினமான விடயம்.

உங்களுக்கு ஏற்கனவே பல வாய்ப்புகள் இருந்தால், அந்த சீர்திருத்தங்களைச் செய்ய நாங்கள் தயார். நாங்கள் எங்கள் புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றி பேசுகின்றோம். புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றி நான் பேசமாட்டேன். நான் பசுமை ஹைட்ரஜன் பற்றியே பேசுவேன். அதில் தான் ஆற்றல் உள்ளது. ஆம், பசுமை ஹைட்ரஜனாக மாற்றக்கூடிய அபரிமிதமான ஆற்றலை புதுப்பிக்கத்தக்க சக்தி கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நாம் ஏன் அபிவிருத்தி செய்து ஒரு மையமாக மாறக்கூடாது? நான் இறுதியாக கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதன் கிழக்கு முனையத்தை வழங்க முயற்சித்தேன். நான் நாட்டை விற்க முயற்சிக்கிறேன் என்று ஒரு பெரிய விவாதமே ஏற்பட்டது.

நாம் இப்போது மிகச் சிறந்த முனையத்தை கொடுத்திருக்கின்றோம். மிக நல்ல விடயம். ஆனால் தொடர்ந்தும் நீங்கள் இவ்விதமாக பயணிக்க விரும்பினால் நீங்கள் கிழக்கு முனையத்தையும் வெளியே கொடுக்க வேண்டும்.

முதல் தெரிவை நாம் ஜப்பானுக்கு வழங்கியுள்ளோம். அவர்கள் இல்லையென்றால், மற்றவர்களை அழைப்போம். கொழும்பு துறைமுகம் தெற்காசியாவில் மிகவும் பரபரப்பான துறைமுகமாக இருக்க வேண்டும். சிறிய துறைமுகம் நிரம்பியதும் அதனால் அவ்வாறு செயற்பட முடியாது. எனவே கொழும்பு துறைமுகத்தை ஜா-எல வரை விஸ்தரிப்பது தொடர்பில் நாம் பேசியும் சிந்தித்தும் வருகின்றோம்.

இப்பிராந்தியத்தில் மூன்று சிறந்த விளையாட்டுகள் உள்ளன. எமது மையம், பசுமை ஹைட்ரஜனைப் பற்றி சிந்தித்து, பின்னர் நமது விவசாயத்தை நவீனமயமாக்கும் என்று நான் நினைக்கிறேன்.

சிறு விவசாயங்கள் எமது விவசாயத்துறையை நவீனமயமாக்கி ஏற்றுமதிக்கு தயார்படுத்தலாம். இதைச் செய்ய முடியும். ஆனால் அதற்கு உயர் தொழில்நுட்பம் தேவை. அதற்கு மேலதிகமாக நிலமானது மக்களதும் பொருளாதாரத்தினதும் அதிக பட்ச நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும். சம்மேளனம் ஒரு நாள் என்னிடம் வந்து, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்கப் போகிறது. அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள், நிலத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். நீங்கள் அதை பொருளாதாரத்தின் முழு நன்மைக்காக பயன்படுத்தவில்லை என்பதே அங்கு எனது பதிலாக இருக்கும். எனவே அதை நாம் வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும். நில உரிமையாளரிலும் பார்க்க சிறு உடமையாளர்களுக்கு நிலம் வழங்குவதில் அதிக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவர்கள் அதில் காசு போட மாட்டார்கள். எனவே நீங்கள் அதிக போட்டித்தன்மை கொண்ட உற்பத்தித் தொழிலை உருவாக்க வேண்டிய சில மாற்றங்கள் இவை.

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியே சிந்தியுங்கள். எம்மிடம் என்ன உள்ளது. அதைக் கொண்டு எம்மால் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் பார்க்க வேண்டும். எங்களுக்கு கல்வி தேவை. உயர் கல்வி, பாடசாலை கல்வி தேவை. நாம் கல்வியின் மையமாக மாற வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் இணக்கம் தெரிவித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நான் நன்றி கூற வேண்டும். ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டாது, தமது சொந்தக் காலில் நிற்கும் இளைஞர்கள் இன்று ஆயிரக்கணக்கிலும் நூறாயிரக்கணக்கிலும் உழைக்கின்றார்கள். உங்களிடம் இனி எதுவும் இல்லாமல் இருக்கலாம், எனினும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உணர வேண்டும்.

நாம் அனைவரும் 2050 இல் இங்கு இல்லாமல் இருப்போம். ஆனால் இங்கு இருப்பவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த எதிர்காலம் தேவை. எனவே எதிர்காலத்திற்கான எங்கள் திட்டம் அடுத்த 25 ஆண்டுகளைக் கருத்திற்கொண்டதாக இருக்கும். உங்களுக்கு 100 வயதாகும்போது நாங்கள் என்னவாக இருப்போம்? சிந்தித்துப் பாருங்கள்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Exit mobile version