கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது சீனா

Coronavirus economic impact concept image

கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தி உள்ளது.

பீஜீங், சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. அந்த நாட்டில் உருமாறிய புதுவகை கொரோனாவான பிஎப்.7 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எத்தனை பேர் கொரோனாவால் இறக்கிறார்கள் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சூழலில் சீனாவில் தினமும் ஏறத்தாழ 10 இலட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் சாகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர்பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இதுபற்றி சீன அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் சீனாவில் இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வந்த அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என நேற்று அறிவித்தது.

அதே வேளையில் கொரோனா பாதிப்பு விவரங்கள் இனி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களை சீன அரசு குறிப்பிடவில்லை.

Exit mobile version