இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
நகுலேஸ்வரம், திருகேதீச்சரம், திருகோணேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் (புராதன பெயர் சந்திரசேகரேஸ்வரம்), ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் உள்ளிட்ட சிவாலயங்கள் தொடர்பில் ஆராய எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இந்த சிவாலயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாக்கத் தீர்மானித்துள்ளதுடன், இவை சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துகள் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், பொருளாதார ரீதியில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளால், சிவாலயங்களை பாதுகாப்பது தொடர்பான திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச ரீதியில் செயற்படும் இந்து அமைப்புகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களை தம்முடன் கைகோர்க்குமாறும், அமைச்சர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
