மஹிந்த, பெசில் ஆகியோருக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜூலை 05 இல்

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை ஜூலை மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்தவேண்டுமென உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேற்படி அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டபோதே அந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நடத்துவதற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

Exit mobile version