இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் சிங்கப்பூர் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (மே 18) இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் தங்கொடுவ பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரால் துன்புறுத்தப்பட்டதாக நெருங்கிய சகாக்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, அந்த பெண் இலங்கைக்கு திருப்பி வர வேண்டும் என கோரியதாகவும், ஆனால் உரிமையாளரிடமிருந்து நேர்மறையான கருத்து கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நேற்று சிங்கப்பூரில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், உயிரிழந்தவரின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என கூறியுள்ள அமைச்சு , மரணம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

விசாரணைகளில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இலங்கை தூதரகம் தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version