முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள இராணுவ முகாமில் உள்ள தனியாரின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தான் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறக்கொட்டாஞ்சேனை பகுதிக்கு நேற்று மாலை (21.05.2023) சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராணுவமுகாம் உள்ள பகுதிக்குள் உள்ள தனியார் காணி உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இராணுவமுகாமில் உள்ள அரச காணிகள் விடுவிப்பு

இராணுவ முகாமுக்குள் உள்ள தனியார் காணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த இராணுவமுகாமில் உள்ள அரச காணிகளை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தான் கோரிய நிலையில் மட்டக்களப்பிலிருந்த தமிழ் இராஜாங்க அமைச்சர் ஒருவர் அதனை தடுத்ததாகவும், சாணக்கியனின் கோரிக்கையினை ஏற்று காணியை விடுத்தால் தன்னால் அரசியல் செய்யமுடியாது என அன்றைய ஜனாதிபதியிடம் தெரிவித்து குறித்த காணியை விடுவிப்பதை தடுத்ததாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Exit mobile version