பாகிஸ்தான் உடன் கட்டாய வெற்றிக்காக இலங்கை அணி இன்று களத்தில்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர் தோல்வியை தவிர்க்கும் எதிர்பார்ப்புடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று (24) களமிறங்கவுள்ளது.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டுவது கட்டாயமாகும்.

இந்நிலையில் இன்றைய டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க இன்று தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித்த எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறினர். விஷ்வ பெர்னாண்டோ 20 ஓவர்கள் பந்துவீசி 75 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையே வீழ்த்தியதோடு ராஜித்த 19 ஓவர்கள் பந்துவீசி 77 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையே பெற்றார்.

இந்நிலையில் 22 வயது மதுஷங்க இந்த டெஸ்ட் குழாத்தில் இடம்பெறாத நிலையில் டெங்குவினால் பாதிக்கப்பட்டிருந்த அசித்த பெர்னாண்டோவுக்கு மேலும் ஓய்வு தேவைப்படும் நிலையில் அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். மதுஷங்க முதல்தர போட்டிகளில் சிறிய அளவு அனுபவம் பெற்றிருந்தபோதும் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்னாண்டோ வேகப்பந்து வீச்சாளராக அண்மைக் காலத்தில் முதல் தேர்வாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சுழற்பந்து வீச்சாளர்களான ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய முதல் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த நிலையில் இரண்டாவது டெஸ்டிலும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் இலங்கையின் துடுப்பாட்ட வரிசை தடுமாற்றம் கண்டபோதும் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நம்பப்படுகிறது. தனஞ்சய டி சில்வா (122 மற்றும் 82) தவிர்த்து அஞ்சலோ மத்தியூஸ் (64) மற்றும் நிஷான் மதுஷ்க (52) ஆகியோர் மாத்திரமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 50க்கும் மேல் ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பும் முதல் டெஸ்டின் போட்டி முடிவில் தாக்கம் செலுத்தியது. குறிப்பாக அந்தப் போட்டியில் தீர்க்கமாக இருந்த இரட்டைச் சதத்தை பெற்ற சவுத் சகீல் 93 மற்றும் 139 ஓட்டங்களை பெற்றிருந்தபோது கொடுத்த பிடியெடுப்புகளை இலங்கை தவறவிட்டிருந்தது.

எனவே தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு இலங்கை அணி களத்தடுப்பில் அவதானம் செலுத்துவது அவசியமாகி உள்ளது.

காலி வெற்றி பாகிஸ்தான் அணி ஓர் ஆண்டில் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாக இருந்தது. இதனை தொடர் வெற்றியாக மாற்றுவதற்கு இன்று கடுமையாக போராடும். அதேபோன்று ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்சிப்பின் அங்கமாக இந்தத் தொடர் இருப்பதால் அதன் புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக உள்ளது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய மைதானமாக எஸ்.எஸ்.சி கடந்த காலங்களில் இருந்த வந்தபோதும் அந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஒன்று நடைபெறுவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது முதல் முறையாக அமையவுள்ளது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியே இங்கு நடைபெற்றது. அந்த டெஸ்டில் இலங்கை அணி கடுமையாக போராடியபோதும் 42 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்திருந்தது.

ஒட்டுமொத்தமாக எஸ்.எஸ்.சி மைதானத்தில் இலங்கை அணி 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நிலையில் 20 வெற்றிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இந்த மைதானத்தில் மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நிலையில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

Exit mobile version