ஒரே நாளில் ரூ. 72 கோடி வசூல்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தை முந்தி 2023ம் ஆண்டில் ரிலீஸான அன்றே அதிகம் வசூலித்த தமிழ் படமாக ஆகியிருக்கிறது ரஜினியின் ஜெயிலர்.

டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது அனிருத்தின் பி.ஜி.எம்.

படம் பார்ப்பவர்கள் அனைவரும் ரஜினியின் நடிப்பையும், அனிருத்தின் பி.ஜி.எம்.மை பற்றியும் தான் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் முதல் நாள் வசூல் விபரம் வந்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் படம் நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 52 கோடி வசூல் செய்திருக்கிறது என்கிற தகவல் காலையிலேயே கிடைத்துவிட்டது.

இந்தியா சரி, உலக அளவில் வசூல் எவ்வளவு என ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். அந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.

ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 72 கோடி வசூல் செய்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1.5 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது ஜெயிலர்.

2023ம் ஆண்டில் ரிலீஸான அன்று உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் 2 இருந்தது. இந்நிலையில் மணிரத்னத்தின் கனவுப்படமான பி.எஸ். 2 -இன் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துவிட்டது.

2023ம் ஆண்டில் ரிலீஸான அன்றே உலக அளவில் அதிகம் வசூலித்த தமிழ் படம் ஜெயிலர் தான். மேலும் தமிழகத்திலும் இந்த ஆண்டு பெரிய ஓபனிங் கிடைத்த படமாக ஜெயிலர் இருக்கிறது.

கர்நாடகாவில் ரிலீஸ் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜெயிலர். கர்நாடகாவில் ஆகஸ்ட் 10ம் தேதி மட்டும் ஜெயிலருக்கு ரூ. 11.85 கோடி கிடைத்திருக்கிறது.

முதல் நாள் வசூலில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களின் சாதனைகளை முறியடித்திருக்கிறது ஜெயிலர். வார இறுதி நாட்களில் ஜெயிலரின் வசூல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முருகா ஜெயிலர் படம் பெரிய பிளாக்பஸ்டராகணும் என திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்தார்கள். மேலும் மண் சோறு சாப்பிட்டார்கள், மவுன விரதம் இருந்தார்கள், மதுவை இனி தொட்டுக் கூட பார்க்க மாட்டோம் என சபதம் எடுத்தார்கள்.

இந்நிலையில் ஜெயிலரின் வெற்றியை பார்த்ததும் நாம் வேண்டியது வீண் போகவில்லை என்கிறார்கள். இதற்கிடையே ஜெயிலரில் கவுரவத் தோற்றத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்த கன்னட நடிகரான சிவராஜ்குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

நாங்கள் இதுவரை சிவராஜ்குமாரின் படங்களை பார்த்தது இல்லை, ஆனால் அவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் தீயாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் சிவாண்ணாவை பார்த்ததும் புல்லரித்துவிட்டது. அந்த காட்சியை பார்த்த பிறகு சிவாண்ணாவின் ரசிகராகிவிட்டோம் என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இமயமலைக்கு சென்றிருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். தலைவர் தனியாக கிளம்பிச் சென்றாரே என வருத்தப்பட்ட அவர்கள், புகைப்படத்தில் அவர் தன் நண்பர் ரவியுடன் இருப்பதை பார்த்த பிறகே நிம்மதி அடைந்துள்ளனர்.

Exit mobile version