குடும்பக் கதையில் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கிறது இயக்குனர் அருவி மதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நூடுல்ஸ் திரைப்படம். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நம்மிடம் இந்த படம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்த்துக்கொண்டார். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம் .
அருவி படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார் மதன், இவர் அருவி படம் நடித்த பிறகு அருவி மதன் என்றே அழைக்கப்பட்டார். கர்ணன், அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாவீரன் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இப்போது நூடுல்ஸ் என்னும் படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் அருவி மதன்.
இந்த நூடுல்ஸ் படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் டுலெட் படத்தின் மூலம் அறிமுகமான ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து அவர்களிடம் கேட்டோம், அதற்கு பல சுவாரசியமான தகவல்களை கூறினார் ஷீலா..
ஷீலா ராஜ்குமார் டுலெட் படத்தில் முதலில் நடித்தார். பிறகு ஜீ தமிழில் அழகிய தமிழ் மகள் என்னும் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என சீரியலிலும் நடித்தார் ஷீலா. பின்னர், மலையாளத்தில் கும்பலங்கி நைட்ஸ் என்னும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஷீலாவிற்கு கிடைத்தது. அதன் பிறகு, திரௌபதி, நம்ம வீட்டு பிள்ளை, பேட்டக்காலி, மண்டேலா என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அருவி மதன் குமார் இயக்கியுள்ள நூடுல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஷீலா. இந்த படத்தில் மிடில் கிளாஸ் இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நூடுல்ஸ் என பெயர் வைப்பதற்கான காரணத்தோடு பேச தொடங்கினார் ஷீலா, ” நாம் சாப்பிடுவதற்கு எளிய முறையில், உடனே செய்துகொள்ள முடிவது நூடுல்ஸ் தான். விளம்பரங்களில் 2-3 நிமிடங்களில் நூடுல்ஸ் செய்துவிடலாம் என கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில், இந்த படத்தில் 3 நிமிடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது, இந்த சம்பவத்தால் படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் படம். இந்த 3 நிமிட சம்பவத்தை மையப்படுத்தியதால் நூடுல்ஸ் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது”.
இந்த படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, “இந்த படத்தில் நான் ஹீரோயினாக நடித்துள்ளேன், எனக்கு ஜோடியாக ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார், இந்த படத்தின் இயக்குனர் அருவி மதனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், நிறைய புதுமுகங்களும், வாய்ப்பு கிடைக்காத பழைய முகங்களையும் இந்த படத்தில் பார்க்கமுடியும்” என்றார்.
இந்த படத்தின் கதை குறித்த கேள்விக்கு, “அழகான மிடில் கிளாஸ் குடும்பம், அப்பா, அம்மா ஒரு குழந்தை. சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் இருக்கிறார்கள். சிறிய நேரத்தில் நடக்கும் ஒரு நிகழ்வினால் இந்த குடும்பத்திற்கு என்ன ஆகிறது, இவர்களை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் கதை. நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம் வாழ்க்கை. இன்று ஒரு முடிவை எடுத்துவிட்டு, நாளை இந்த முடிவைப் பற்றி யோசிப்போம், அதே போல ஒரு சம்பவம் படத்தில் இருக்கும். அபார்ட்மெண்டில் முதல் தளம், இரண்டாவது தளம், மூன்றாவது தளம் என இருப்பவர்களின் வாழ்வை பொருத்தி பார்க்கும் அளவிற்கு இந்த படம் இருக்கும், இந்த படத்தில் கற்பனை செய்து பார்க்கும் அளவிற்கு ஒன்றுமே இல்லை, நிஜ வாழ்வில் நடப்பது, நம் வாழ்வில் நாம் தினமும் சந்திப்பது போன்றவற்றை பல சஸ்பென்சுகளோடும் விறுவிறுப்போடும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் நிறைய டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கும். அடுத்தது இதுதான் என நீங்கள் ஒன்று நினைப்பீர்கள் ஆனால் படத்தில் அது நடக்காது. படத்தை பார்க்கும்போது நகர கூட முடியாத அளவிற்கு உங்களை கட்டிபோட்டுவிடும் என்றால் பாருங்களேன்” என்றார் சிரித்துக்கொண்டே.
