லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 170’ படம் குறித்து ரஜினி பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ரஜினியின் ‘தலைவர் 170’ படத்திற்கான வேலைகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. த. செ. ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இப்படம் துவங்கியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த புது தெம்பில் தனது புதிய படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார் ரஜினிகாந்த். இதனிடையில் கடந்த இரண்டு நாட்களாக ‘தலைவர் 170’ படம் குறித்த அதிரடி அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ‘தலைவர் 170’ படம் குறித்த அறிவிப்புகளை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வருகிறது. முதல் நாளில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குனர் த.செ. ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் என ஏற்கனவே நமக்கு தெரிந்த அப்டேட்களையே வெளியிட்டது படக்குழு.
இதனையடுத்து நேற்று ‘தலைவர் 170’ படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியானது. சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய துஷாரா விஜயன், தற்போது ரஜினி 170 படத்தில் நடிக்கவுள்ளார். இவரையடுத்து நடிகை ரித்திகா சிங்கும் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
அதன்பின்னர் நேற்றைய தினத்தின் மூன்றாவது அப்டேட்டாக மஞ்சு வாரியர் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் மஞ்சு வாரியர், இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனையடுத்து இன்றைய அப்டேட்டாக ராணா டகுபதி படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ பட ஷுட்டிங்கிற்காக செல்வதாக தெரிவித்துள்ளார். படத்தின் டைட்டில் இனிமேல் தான் வெளியாகும் என கூறியுள்ள ரஜினி, த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுது போக்கு படமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ஜெயிலர்’ படம் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றதா? இல்லையென்றால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லையா? என கேட்கப்பட்டதிற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றி என தெரிவித்துள்ளார்.
‘தலைவர் 170’ படம் அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரம்மாண்டமான பொழுது போக்கு படமாக இருக்கும் என ரஜினி தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. தலைவருக்கு ஜெயிலரை போல் ஸ்டைலான பிரம்மாண்டம் தான் சரியாய் இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ‘தலைவர் 170’ பட இயக்குனர் த.செ. ஞானவேல் இதற்கு முன்பாக இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
