மக்கள் துயரங்களைப் புரிந்து கொள்ளாத இந்த அரசாங்கம் வற் வரியை அதிகரித்ததை கொண்டாட அலரி மாளிகையில் விருந்துபசாரம் நடத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வற் வரி திருத்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், அதன் வெற்றியை அரசாங்கம் ஆரவாரம் செய்து கொண்டாடியுள்ளது. நேற்று இரவு அலரி மாளிகையில் விருந்துபசாரம் கூட நடத்தியுள்ளனர். பிரதமரே இதற்கான அனுசரணையாளர். இந்த விருந்துபசாரத்தில் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் ஊழல் நிறைந்த கிரிக்கட் நிர்வாகத்திற்கு எதிரான எனது போராட்டத்தினால் அமைச்சுப் பதவியை இழந்த ரொஷான் ரணசிங்க,வெற் வரி திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வாக்களித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது வற் வரி அதிகரிப்பை கிறிஸ்மஸ் விருந்து என்று கூறி கொண்டாடி வருகின்றனர். அரசாங்கம் கிறிஸ்மஸ் கொண்டாடினாலும்,மக்களுக்கு துயரத்தையும் வேதனையும் மட்டுமே உரித்தாக்கியுள்ளது. அதனால் தற்போதாவது வற் வரி அதிகரிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
