எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துருக்கு.. அம்மா சொன்ன வார்த்தைகள்: மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்.!

எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துருக்கு.. அம்மா சொன்ன வார்த்தைகள்: மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்.!

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார் ரஹ்மான். அத்துடன் ரசிகர்களுக்காக பல்வேறு இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ஆக்ஸ்போர்டு யூனியன் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் ஏ.ஆர். ரஹ்மான் பேசினார். அப்போது தற்கொலை எண்ணங்கள் குறித்து பேசிய அவர், எனக்கும் இளம் வயதில் தற்கொலை எண்ணங்கள் வந்து இருக்கின்றன. அந்த சமயத்தில் என் அம்மா ‘பிறருக்காக நீ வாழும் போது இதுபோன்ற எண்ணங்கள் எல்லாம் தோன்றாது’ என என்னிடம் கூறினார்.

எனக்கு அவர் அளித்த அறிவுரைகளில் அற்புதமானது அது. நீங்கள் பிறருக்காக வாழும் போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்த்து அர்த்தமுடன் இருக்கும். பிறருக்காக இசையமைப்பது. எழுதுவது. உணவு இல்லாதவர்களுக்கு உணவளிப்பது. யாரையாவது பார்த்து புன்னகை செய்வது. இவை தான் நம்மை இயக்குகிறது.

நம்மால் எதிர்காலத்தை பற்றி பெரிதாக கணிக்க முடியாது. ஆனால் உங்களுக்காக அற்புதமான ஒன்று காத்திருக்கிறது. இதுபோன்ற நம்பிக்கைகளும், எண்ணங்களும் தான் என்னை இயக்கி கொண்டிருக்கின்றன. கடினமான நாட்கள் என்பது எல்லாருக்கும் இருக்கும். இங்கு நிரந்தரம் என ஒன்று இல்லை. இவ்வாறு தற்கொலை எண்ணம் குறித்து பேசியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் இந்த பேச்சு பலர் மத்தியிலும் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

‘அயலான்’ படத்தினை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் ரஜினியின் ‘லால் சலாம்’ படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதனையடுத்து கமலின் ‘தக் லைஃப்’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். மணிரத்னம் இயக்கவுள்ள இப்படத்தின் ஷுட்டிங் இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது. மேலும், மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version