ராஜேஷ் டோப்ரியல்
கத்தாரில் தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை செய்தி சேனல் மூலம் பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் சிறையில் தனிமையில் இருப்பது தான் ஒருவருக்கு வழங்கப்படும் மிகவும் கடினமான தண்டனை எனவும் கூறுகிறார் கேப்டன் வஷிஷ்தா.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய எட்டு இந்திய கடற்படை வீரர்களில் ஒருவர் கேப்டன் சௌரப் வஷிஷ்தா. பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கத்தாரில் நடைபெற்றது குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
பள்ளிப்படிப்பை முடித்து இந்திய கடற்படையில் பொறியாளராகச் சேர்ந்த கேப்டன் சௌரப் வஷிஷ்தா 26 வருடங்கள் பணியாற்றினார். இந்திய கடற்படையிலிருந்து 2018ம் ஆண்டு விருப்ப பணி ஓய்வு பெறும் போது, பிரிகேடியருக்கு இணையான கமோடர் பதவியில் இருந்தார். பின், 2019ம் ஆண்டு கத்தாரில் வேலை கிடைத்து அங்கு பணியாற்ற தொடங்கினார்.
2022ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி அவரும் வேறு சிலரும் கத்தாரில் திடீரென்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பிறகு அந்த தண்டனை குறைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நாளிலிருந்து விடுவிக்கப்படும் வரை கேப்டன் சௌரப் வஷிஷ்தா 17 மாதங்கள் கத்தார் சிறையில் இருந்துள்ளார்.
