பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வையுங்கள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்கமைய, பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ரமலான் நோன்பு நோற்கும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களுடன் மார்ச் 01ஆம் திகதி நடைபெற்ற சுமுகமான சந்திப்பின் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊவா வெல்லஸ்ஸ இரு திசைகளின் பிரதான சங்கநாயக்கரும், யுடகனாவ ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டித அதிவணக்கத்துக்குரிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரைச் சந்தித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
தொழிற்கல்விக்குத் தகுந்த அங்கீகாரத்தை வழங்கும் வகையில், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி நவீன பாடநெறிகளுடன் கூடிய 50 தொழிற்கல்வி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, புதிய பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளைக் கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தல பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
