இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (30/12/2022 ) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 99. இது தொடர்பாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது” எனத் தன்னுடைய தாய்க்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, பிரதமர் மோடி இன்று வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹீராபென் மோடியின் உடல் மருத்துவமனையிலிருந்து காந்தி நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரின் உடலை மோடி தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார். அதைத் தொடந்து அவருடைய இல்லத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. மேலும், தன் தாயாருக்கு மரியாதை செய்ய பா.ஜ.க தலைவர்கள் தங்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு வரவேண்டாம். பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறித்திருந்தார். இந்த நிலையில், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தகன மையத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
