மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை ப்ராபோன் மைதானத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் ஆட்டம் குஜராத் ஜெயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஸ்னே ராணா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார்.
இதையடுத்து களத்தில் இறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் அதிரடி பேட்டர் ஹேலி மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த முதல்கட்ட இழப்பை சரி செய்ய மும்பை அணிக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. இதன்பின்னர் இணைந்த யஸ்திகா பாட்டியா – நேட் சீவர் இணை நிதானத்துடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 75 ரன்களை மும்பை அணி எட்டியபோது நேட் சிவர் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
37 பந்தியில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார் யஸ்திகா பாட்டியா. கடைசி நேரத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய கேப்டன் கவுர் 30 பந்தில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அமேலியா கெர் 19 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.





Discussion about this post