ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாயமான சின்னங்கள்; 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டுகோள்…

 எவரிடத்தில் இருப்பினும் உடனடியாக கையளிக்குமாறும் தகவல்களை 0112354354 அறிவிக்கலாமென்றும் தெரிவிப்பு

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருப்பின்,அவற்றை ஜூலை 31க்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான கலைத்துவ மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க பொருட்கள் கடந்த 2022-07-09 முதல் 2022-07-14 வரையிலான தினங்களில், காணாமல் போயிருந்தன.

நாட்டின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமாக காணப்பட்ட (Coats of Arms) சின்னங்கள் பலவும் அவற்றுள் அடங்கும்.

ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தியிருந்த சிலர் இவற்றை எடுத்துச் சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையிலே,இவ்வேண்டுகோளை அவர்,விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில் அல்லது நிறுவனமொன்றிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மேலும் இது பற்றிய தகவல்களை அறிந்திருப்பின் 0112354354 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுகொண்ட ஜனாதிபதியின் செயலாளர், தேசிய பெறுமதிமிக்க உத்தியோகபூர்வ சின்னத்தை தேடியறிவதற்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version