பொலன்னறுவை மனம்பிட்டி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஸ்ஸின் சாரதி மதுபானம் அருந்தி இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும், சாரதி வேறு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளாரா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
எனினும், பாதுகாப்பற்ற விதத்தில் பஸ்ஸை செலுத்தியமை தொடர்பில் இதற்கு முன்னரும், குறித்த சாரதிக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த சுமார் 40 பேர் பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வருவோரில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
