3,000 தாதியர்களை இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

தாதியர் சேவைக்காக 3,000 தாதியரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால், குறிப்பிட்ட அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனகஸ்ரீ

சந்திரகுப்த உள்ளிட்ட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

அதன்படி 2018ஆம் ஆண்டு மாணவ தாதியர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட 2,500 பயிற்சியாளர்கள் மற்றும் தாதியர் பட்டதாரிகள் 500 பேரை இவ்வாறு தாதியர் சேவைக்காக இணைத்துக்கொள்வதே இலக்காகும்.

இதேவேளை, தாதியர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படும் 2019/2020 உயர்தர அணியின் விண்ணப்பப்படிவங்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள் மூன்று வருடகால தாதியர் பயிற்சிக்கு உள்ளீர்க்கப்படுவார்கள்.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் 3,315 பேர் தாதிய மாணவ, மாணவிகளாக பயிற்சிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் 2018/2019 ஆண்டுகளில் உயர்தர பெறுபேறுகளுக்கு அமைய சித்தி பெற்றவர்களாவர். அதன்படி தற்போது இந்நாட்டில் தாதியர் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 6,700 ஆகும்.

உலகளாவிய கொவிட்-19 தொற்று போன்ற எதிர்பாராத நிலைமையில் தாதியர்களை இணைத்துக்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டாலும், எதிர்காலத்தில் சரியான நேரத்தில் அவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேடமாக உயர்தரத்தை பூர்த்தி செய்த இவ்வாறு சேவைகளை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் அதற்காக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவ்வாறான நிலைமையை சரியாக புரிந்துகொண்டு குறித்த அதிகாரிகள் அதற்காக சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தாதியர்களுக்கான இடமாற்றம் தொடர்பாகவும் சரியான இடமாற்ற நெறிமுறையொன்றை பின்பற்றுமாறும் பல வருடங்களாக ஒரே வைத்தியசாலையில் பணிபுரிபவர்கள் அதனால் பெருமளவு பாதிப்புக்குள்ளாவதாகவும் எதிர்காலத்தில் குறிப்பிட்ட கால எல்லையை பூர்த்தி செய்தவர்களுக்கு சரியான நெறிமுறைகள் வாயிலாக இடமாற்றம் பெற்றுக்கொடுக்க சாதகமான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை பெற்றுக்கொடுத்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேலதிக செயலாளர் (நிர்வாகம் II) ஏ.எம்.வத்சலா பிரியதர்ஷினி, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்II) எச்.சாமிக்க கமகே உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தார்கள்

Exit mobile version