– மக்களுக்கான அரசாங்கமும், நிதி ஒழுக்கத்துடன் கூடிய வலுவான பொருளாதாரமும் நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், 7 வருடங்களுக்குப் பிறகு இந்த இழப்பீட்டை வழங்க முடிந்தது
– மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேவேளை, அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
– ஜனாதிபதி வலியுறுத்தல்
– தேர்தல் வாக்குறுதியொன்றை நிறைவேற்றி இந்த இழப்பீட்டை வழங்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்
– கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 – 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) முற்பகல் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த உப்புநீர்த் தடுப்பின் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய, கெகனதுர, மாலிம்பட, வில்பிட, மடிஹ மற்றும் தலல்ல உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள விவசாயக் காணிகள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள்ளாகின.
அந்த சமயம் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்காதிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 1200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கமைய, 2019 சிறுபோகம் முதல் 2022 சிறுபோகம் வரையிலான தொடர்ச்சியான 7 போகங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.
குறித்த போகங்களில் தமக்கு ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து கமநல சேவை நிலையங்களுக்கு முறையாக அறிவித்த அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிவாரணம் கிடைக்கப் பெறவுள்ளதுடன், இதற்கமைய பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத 12,800 ஏக்கர் காணிக்காக இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அடையாள ரீதியாக 250 விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் தலைமையில் இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இழப்பீட்டுக்குத் தகுதியான ஏனைய அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 14 நாட்களுக்குள் இழப்பீடுகளை வழங்கி முடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
மக்களின் அரசாங்கமும், ஒழுக்கத்துடனான வலுவான பொருளாதாரமும் தற்போது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக வரலாற்றில் அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு குறுகிய காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேவேளை, படிப்படியாக அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தேசிய பொருளாதாரத்தில் அவர்களைப் பங்காளிகளாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்கமைய, சிறு வர்த்தகர்களுக்குக் கடனுதவி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் 90,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘சமூக சக்தி’ வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் முக்கிய பொருளாதாரக் காரணிகள் பலவற்றில் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரத் தரவுகளைப் போலவே மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு தூரம் இலகுவாகிறது என்பதைக் கொண்டே நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரதிபலிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
மக்களுக்குப் பொறுப்புக் கூறும் மக்களுக்கான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை எனவும், அதற்காகக் கனவு காண்பவர்கள் திருடர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் வர்த்தகர்களுமே ஆவர் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அவர்கள் செய்த ஊழல், மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அவர்கள் பதற்றமடைந்து பல்வேறு பொய்ப் பிரசாரங்களை பரப்பி வருவதாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை வென்று மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இப்பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாத்தறை மாவட்ட செயலகம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
மாத்தறை வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு நிரந்தர வருமான வழியை ஏற்படுத்தி, உயர்தர வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், மாத்தறை மாவட்டத்தைப் பரந்தளவிலான அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிக வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய மிக முக்கியமான வழி கல்வி என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை நவீனமயமாக்குவதுடன், 50 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து பரந்தளவிலான கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி :
தேர்தலின் போது நில்வலா துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நாங்கள் வாக்குறுதி அளித்தோம். இங்கு பல பிரச்சினைகள் உள்ளன. நீர் தொடர்பான பிரச்சினை உள்ளது. நில்வலா ஆற்றின் கீழ் படுகைப் பகுதி சிறிய வெள்ளத்தினாலும் மூழ்கடிக்கப்படுகிறது. உப்பு நீர்த் தடுப்பின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாய மக்கள் எப்போதுமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஒருங்கிணைப்புக் குழுவுக் கூட்டங்கள் பயிர் சேதமடைந்த விவசாய மக்களின் பிரச்சினைகளால் சூடு பிடிக்கும். இன்று இந்த பயனாளிகளுக்குப் பயிர் இழப்பீடு கிடைப்பது மட்டுமன்றி, நில்வலா கங்கையின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு தேவையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு முடிவடைவதற்குள் சாத்தியக்கூறுகளைக் கண்டறிவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு, உப்பு நீர்த் தடுப்பு குறித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 1200 மில்லியன் ரூபா நிதி, 2019 முதல் 2022 வரை பல போகங்களாகப் பயிர்ச் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீண்ட காலமாக இழப்பீடு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போது நீங்கள் எந்தவொரு போராட்டமும் நடத்தத் தேவையின்றி பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். சில விவசாயிகளுக்கு சுமார் 29 இலட்சம் ரூபா போன்ற பெருந்தொகை இழப்பீடாகக் கிடைக்கிறது. அந்தளவிற்குப் பெரிய இழப்பீட்டுத் தொகையை இந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒதுக்கியுள்ளோம். எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதிக்குள் இந்த இழப்பீடுகளை வழங்கி நிறைவு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
வீதியில் இறங்கிப் போராடியிருந்தால் இதைவிடக் கூடுதல் இழப்பீட்டை பெற்றிருக்கலாம் என்று சிலர் கூறினார்கள் . சிலர் இந்த இழப்பீட்டை நிராகரிப்போம் என்றும் கூறுகின்றனர். எனினும், உங்களைப் போராட வைக்காமல், உங்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து, இந்த இழப்பீட்டுத் தொகையை இன்று உங்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இங்குள்ள அதிகாரிகள் அதற்குச் சாட்சியமளிப்பார்கள். உங்கள் வலியையும் பிரச்சினையையும் நாங்கள் நன்கு புரிந்து வைத்திருந்ததாலேயே இது சாத்தியமானது.இந்த இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டால் விவசாய நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்று சிலர் கூறினார்கள் . ஆனால் அப்படி எதுவும் நடக்காது” என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம உரையாற்றுகையில்:
கடந்த ஆட்சிக் காலங்களில் போராடியும் பெற்றுக்கொள்ள முடியாமல் போன, கிடைக்காமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ஓர் இழப்பீட்டையே இன்று நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். விவசாயிகள் போராட்டம் நடத்தும் போது, அவர்களை அழைத்து இவ்வளவு இழப்பீடு தருகிறோம் என்று பொய் கூறுவார்கள். அதன் பிறகு அடுத்த போகத்திலும் மீண்டும் பயிர்ச்சேதம் ஏற்படும். மீண்டும் போராடுவார்கள். விவசாயிகளுக்கு மீண்டும் அதே போன்று ஒரு வாக்குறுதியை அளித்தனர். இதுதான் பல வருடங்களாக நடந்து வந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில், முழுமையான இழப்பீட்டை வழங்கி நிலங்களைக் கையகப்படுத்தவும் முன்மொழியப்பட்டது. எனினும், நில்வலா கீழ் படுகையின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட, 2019 சிறுபோகம் முதல் 2022 சிறுபோகம் வரை ஏழு போகங்களாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின்
சேதங்களை நிவர்த்தி செய்ய குறிப்பிட்டளவு இழப்பீடு வழங்கப்படும் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்திலும், பாராளுமன்றத்திலும் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் கூடி கலந்துரையாடினோம். அதன் மூலமே இந்த இழப்பீடு வழங்குவதை யதார்த்தமாக்க முடிந்தது. அரசியல் அதிகாரத்தைப் போன்றே அதிகாரிகளும் ஒன்றிணைந்து எடுத்த முயற்சியாலேயே இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிந்தது. கமநல
அபிவிருத்தித் திணைக்களம். விவசாயத் திணைக்களம், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
நில்வலா உப்புநீர்த் தடுப்பிற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வருடத்திற்குள் அதனை நிறைவு செய்ய முடியாது என்பதால், அந்த நிதியையும், வாய்க்கால்களைப் புனரமைப்பதற்காகவே ஒதுக்கப்பட்ட நிதியையும் பயன்படுத்தி, நில்வலா கங்கையுடன் இணையும் கால்வாய்கள் மற்றும் ஏனைய வாய்க்கால்களைப் புனரமைக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் எவ்வளவு மழை பெய்த போதிலும் மாத்தறையில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முடிந்தது” என்றும் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், வலுசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ், தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மானவடு, பாராளுமன்ற உறுப்பினர்களான லால் பிரேமநாத், அஜந்த கம்மெத்தேகே உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, விவசாய மற்றும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்ஆரச்சி உள்ளிட்ட அரச அதிகாரிகளும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
