உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டில் நீதியையும் நியாயத்தையும் பாராட்டும் அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவோ அல்லது எத்தகைய உயர்ந்த பதவியை வகித்தாலும் குற்றம் செய்தால் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென்ற செய்தி இந்த தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதனை தற்போதைய ஆட்சியாளர்கள் போன்றே எதிர்கால ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கான தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியிலுள்ள உண்மை மற்றும் சூழ்ச்சிகள் வெளிவரும் வரை அதற்கான நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.




Discussion about this post