காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரபரப்பான ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி, முரண்பிடித்து வரும் கர்நாடகா, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடந்த விஷயங்கள் ஆகியவற்றை விளக்கியுள்ளார். இறுதியாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகம், கர்நாடகா இடையில் பல ஆண்டுகளாக இழுபறியாக சென்று கொண்டிருக்கும் விவகாரம் காவிரி நதிநீர் பங்கீடு. உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எதுவும் முழுமையாக கடைபிடிக்கப்பட வில்லை. இந்த விஷயத்தில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை கர்நாடகா சரியாக பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் எஞ்சிய நீரை திறந்து விடுவதில் கர்நாடகா அரசு முரண்டு பிடித்து தமிழகத்திற்கு அதிர்ச்சியூட்டியது. இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது நியதி.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஒவ்வொரு மாதமும் கர்நாடகா காவிரியில் எவ்வளவு நீரை திறந்து விட வேண்டும். அந்த நீர் பில்லிகுண்டுலுவில் அளவீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11ஆம் தேதி வரையில் கர்நாடகா அரசு 53.7703 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வெறும் 15.7993 டி.எம்.சி தான் அளித்துள்ளது. இதன்மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 37.9710 டி.எம்.சி.
இதனால் தஞ்சை பகுதியில் காவிரி நீரை எதிர்பார்த்து நிற்கும் பயிர்கள் காய்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும். எனவே நிலைமையை உணர்ந்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள Cauvery Water Regulatory Committee, Cauvery Water Management Authority ஆகியவை விரைந்து செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற்று தர கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை 2 முறை சந்தித்தேன். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி நிலைமைகளை விளக்கியுள்ளார். இறுதியாக நமது வற்புறுத்தலுக்கு இணங்கி நேற்று (10.8.2023) நடந்த Cauvery Water Regulatory Committee கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு 15,000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு விடுவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.





Discussion about this post