இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் தம்மை தாக்கியதாக அவர் தாக்கல் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Discussion about this post