- சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிப்பு
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரச அதிகாரிகள் பெரும் செல்வாக்குச் செலுத்த முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக அரச உத்தியோகத்தர்கள் பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்று படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக 2012ஆம் ஆண்டு அரச நிர்வாக சேவை அதிகாரிகள் ஆற்றிய பணியையும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இதன் போது பாராட்டினார்.
“Be the impact” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடலில் அதன் தலைவர் சுரங்க ரணசிங்க உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அத்துறையில் கடமையாற்றிய 2012 ஆம் ஆண்டுக் குழுவின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






Discussion about this post