மேல் நீதிமன்றத்துக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது
கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு விழாவில்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
இருபத்தியோராம் நூற்றாண்டில் நீதி நிலைநாட்டுவதை விரைவுபடுத்துவதில் மேல் நீதிமன்றத்துக்கு முக்கிய பங்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வழக்கு விசாரணைகள் தாமதமாகுதல், இதனால் அதிக செலவுகளை சுமக்க வேண்டிய நிலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுதல் ஆகியன விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மேல் நீதிமன்றத்தின் வகிபாகம் மற்றும் நீதி நிலைநாட்டுவதை விரைவுபடுத்துதல் தொடர்பான அணுகுமுறை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் மையமாக மேல்நீதிமன்றமே காணப்படுவதாகவும் தெரிவித்தார். கொழும்பு மொனார்க் இம்பீரியலில் நடைபெற்ற கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டங்கள் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நாடு முன்னோக்கிச் செல்லும் போது புதிய சட்டங்கள் தொடர்ந்து உருவாக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதில் மேல் நீதிமன்றத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக பல வருடங்களாக தமது பணியை நிறைவேற்றிய சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நிகழ்வில் விருதுகளை வழங்கி கௌரவித்ததுடன், சட்ட மாஅதிபர் சஞ்ஜெய் ராஜரட்ணத்திற்கு நினைவுப் பரிசொன்றையும் கையளித்தார்.
சட்ட மாஅதிபர் சஞ்ஜெய் ராஜரட்ணம், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் குணவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
நீங்கள் எனக்கு வழங்கிய விருதுக்கு முதலில் நன்றி சொல்ல விரும்புகின்றேன். ஆனால் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும், நான் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகப் பணியாற்றியதில்லை. நான் சட்டத்தரணியாகப் பணியாற்றாத நீதிமன்றமே அது. நான் வழக்கறிஞர் தொழிலில் இணையும்போது, மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படாமல் இருந்ததுவே அதற்கான காரணமாகும்.
அந்த நேரத்தில் எங்களுக்கு அசிஸ் (Assize) நீதிமன்றம் இருந்தது. ஆங்கிலேயர் காலத்து நீதிமன்றம் என்று நினைக்கிறேன். சட்டக்கல்லூரி மாணவர்களான நாங்கள் கொழும்பு அஸீஸ் நீதிமன்றத்தில் வழக்குகளை கேட்பதற்காக அங்கு செல்வோம். அஸீஸ் நீதிமன்றத்தில் “கலத்தேவ வழக்கு” மற்றும் “குலரத்ன வழக்கு” போன்ற வழக்குகள் அப்போது நிலுவையில் இருந்தன. உங்களில் எத்தனை பேருக்கு “Pauline D’Cruz வழக்கு” நினைவிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இவை இந்த நாட்டில் விசாரிக்கப்பட்ட மிகவும் பிரபலமான வழக்குகள்.
நான் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அஸீஸ் நீதிமன்றம் இருந்தது. எனினும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், எனது சிரேஷ்ட சட்டத்தரணிகளுள் ஒருவரான எச்.டபிள்யூ. ஜயவர்தன உட்பட பலர் மேல் நீதிமன்றத்தை நிறுவுவது குறித்து கொண்டு வந்த பிரேரணை எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, அஸீஸ் நீதிமன்றம் இருக்கின்ற போது, மேல் நீதிமன்றம் தேவையா என்று நாட்டில் பெரிய விவாதம் நடந்தது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண மேல் நீதிமன்றங்கள் நடைமுறைக்கு வந்தன. அதற்கு மேலதிகமாக வணிக மேல் நீதிமன்றங்களும் நிறுவப்பட்டன. நீதித்துறை விரிவாக்கப்பட்டது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இப்போது கொழும்பு துறைமுக நகர் பகுதிக்குள் புதிய வணிக மேல் நீதிமன்றத்தை அமைப்பது குறித்து கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் அப்பகுதியின் நீதித்துறை விவகாரங்களைக் கையாளக் கூடியதாக இருக்கும். இது நமது சட்டக் கட்டமைப்பில் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவரும். இது குறித்து ஏனைய துறைகளுடன் நாம் விரிவான கருத்தாடல் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
உதாரணமாக, பெண்களின் சமத்துவம் மற்றும் பெண்களை பலப்படுத்துதல் ஆகியவற்றுக்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.இதற்காக பெண் சட்டத்தரணிகளை மாத்திரம் ஈடுபடுத்துவதா? அல்லது இரு தரப்பினரையும் பங்கேற்கச் செய்வதா? என்பதை கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகளே தீர்மானிக்க வேண்டும்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்த உள்ளோம். அங்கு மேல் நீதிமன்றத்துக்கு பெரும் பொறுப்பு உள்ளது. ஒரு நாடாக நாம் முன்னேறும்போது புதிய சட்டங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டாலும், பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.






Discussion about this post