இலங்கையில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவக் களஞ்சியங்களிலும் மாகாணப் களஞ்சியங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் அண்மைக்காலமாக அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தன.
1300 அத்தியாவசிய மருந்துகளில் 140-150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின், இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின், மெட்ஃபோர்மின், குழந்தைகளுக்கான சிரப், மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக மருந்துகளுக்கு தற்போது பற்றாக்குறை இருப்பதாக GMOA மேலும் கூறுகிறது.
“ஜனவரி இறுதிக்குள் பல அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்புதீர்ந்து விட்டது. இம்மருந்துகளைகொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பல மருத்துவமனைகள் சிரிஞ்ச்கள், வடிகுழாய்கள், கேனுலாக்கள் போன்ற மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பல அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் பணம் ஒதுக்கியதாக கூறினாலும், அது இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை, ”என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.






Discussion about this post